சீதாராமர் திருமணம்(SITA RAMAR THIRUMANAM)

 மிதிலை நகருக்குள் இராமர், இலக்குவர், விசுவாமித்திரர் மூவரும் பிரவேசித்தனர். தன் தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்த சீதை இராமரை நோக்கினாள்.

 

"எண்ணரும் நலத்தினாள் இனையள் நின்றுழி

 கண்ணோடு கண்ணினை கதுவி ஒன்றைஒன்று

 உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட

 அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்"



 இராமரைக் கண்டவுடன் சீதை உள்ளத்தில் அன்பு பூண்டாள். அரசவையில் மூவரும் நுழைந்தனர். இராமரின் அழகு அனைவரையும் கவர்ந்தது.

ஜனகர் சீதைக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்திருந்தார். சிவதனுசை கையில் எடுத்து நாணேற்றுபவருக்கே சீதையை திருமணம் செய்து தரப் போவதாக ஜனகர் அரசவையில் கூறினார்.

கன்னிமாடத்தில் நின்றிருந்த சீதையை இராமர் நோக்கினார். இராமரும் சீதையும் கண்களால் தங்களது அன்பினைப் பரிமாறிக் கொண்டனர். இருவரும் உள்ளத்தால் இணைந்தனர்.

விசுவாமித்திரர் இராம இலக்குவரை ஜனக மன்னரிடம் அறிமுகம் செய்து வைத்தார். ‘‘அயோத்தி மன்னர் தசரதச் சக்கரவர்த்தியின் குமாரர்கள். இராமர் வில்வித்தையில் அபார ஆற்றலுடையவன்’’ என்று கூறினார். மேலும் “தாடகை, சுபாகு, மாரீசன் மூவரையும் அழித்து தன் யாகத்தினைக் காத்த வெற்றி வீரர்கள்” என்று இராம, இலக்குவரை விசுவாமித்திரர் ஜனகரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

ஜனகரும் மகிழ்வுடன் நாளை நடைபெறும் சுயம்பர விழாவில் இராமரை கலந்து கொள்ள வேண்டினார். பின் விருந்தினர் விடுதியில் இராம இலக்குவர்கள் இராஜ மரியாதையுடன் தங்க வைக்கப்பட்டனர். மறுநாள் இராமர் அரசவைக்குள் பிரவேசித்தார், விசுவாமித்திரர் ஜனகரிடம் சிவதனுசு இருக்கும் பெட்டியை எடுத்து வரும் படி கூறினார் எட்டுச்சக்கரங்கள் கொண்ட தேரில் சிவதனுசு பல்லாயிரம் வீரர்களால் எடுத்து வரப்பட்டது.

சீதை தன் உள்ளத்தில் இராமர் நாணேற்றி வெற்றி பெற வேண்டும் என்று திருவுளம் கொண்டு நின்றாள். ஜனகரும் தன் உள்ளத்தில் இராமர் சீதையை மணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார். சீதையின் தோழிகளோ பதைப்பதைப்புடன் நின்று கொண்டிருந்தனர். தன் தோழி சீதையின் விருப்பம் நிறைவேற வேண்டும் என்ற உவகையுடன் காத்திருந்தனர்.

இராமர் அப்பெரிய வில்லை ஒரு பூமாலையைக் கையில் எடுப்பது போல மிக எளிதாக எடுத்தார். கண் இமைக்கும் நேரத்தில் சிவதனுசை தூக்கி நிறுத்தினார். தன் கால் கட்டை விரலால் அழுத்திக் கொண்டு, நாணேற்றி வில்லை காது வரை வளைக்கவும், வில் இரண்டாய் முறிந்தது. வில் முறிந்த சப்தம் மேகங்களிலிருந்து இடி இறங்கியது போல் கேட்டது. பூமி அதிர்ந்தது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

 

"பூமழை சொரிந்தார் விண்ணோர் பொன்மழை பொழிந்த மேகம்

பாமமா கடல்கள் எல்லாம் பன்மணி தூவி ஆர்த்த

கோமுனிக் கண்கள் எல்லாம் கூறின ஆசி கொற்ற

நாமவேல் சனகன் இன்றென் நல்வினை பயந்தது என்றான்".

 

சீதை இராமர் கழுத்தில் மாலையிட்டாள். ஜனகரும் விசுவாமித்திரரும் மனம் மகிழ்ந்தனர். ஜனகர் விசுவாமித்திரரிடம், இராம சீதை திருமணத்தை இப்பொழுதே முடிக்கலாமா? அல்லது தயரதன் வர வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு விசுவாமித்திரர் "தயரதன் வர வேண்டும், அவனுக்கு சேதி சொல்லி அனுப்பு" என்றார்.

தயரதனுக்கு திருமணச் செய்தி வந்தது. இராமர் சீதை திருமணத்தைக் கேட்ட தயரதன் மிகவும் மனம் மகிழ்ந்தான்.

உடனே அரசியர் மூவருடனும், மந்திரிமார்களுடனும், உற்றார் உறவினருடனும், நால்வகை சேனைகளுடனும், நாட்டு மக்களுடனும் மிதிலைக்குப் புறப்பட்டார். வசிட்டரும், மற்ற முனிவரும் உடன் வந்தனர்.

ஜனகர், தயரதனை வரவேற்று உபசரித்தார், பின் ஜனகர் தயரதனிடம், ஒரு கோரிக்கையை வைத்தார். தன் இரண்டாவது மகள் ஊர்மிளையை இலக்குவனுக்கும், தன் தம்பி குஜத்வசனின் மகள்களான மாண்டவி, சுருத கீர்த்தி இருவரையும் முறையே பரதனுக்கும், சத்துருக்கனுக்கும் திருமணம் செய்து வைக்கக் கேட்டார்.

தன் குமாரர்கள் நால்வருக்கும் திருமணம் நடைபெறுவதனை அறிந்து தயரதன் மிக்க மகிழ்ச்சி அடைந்தார், தன் சம்மதத்தினை ஜனகரிடம் தெரிவித்தார்.

மிதிலை விழாக் கோலம் பூண்டது. இரு தரப்பினரும் கலந்துப் பேசி பங்குனி உத்திரத்தன்று திருமணம் என்று தீர்மானித்தனர். வசிட்டர் நான்கு திருமண மேடைகள் அமைத்தார். 

மாவிலைகளாலும், மஞ்சள், கமுகு தோரணங்களாலும், முத்துப் பந்தலாலும் அரண்மனை அலங்கரிக்கப்பட்டது. திருமண மண்டபம் மேரு மலை போல் இருந்தது.

இராமர் மங்கள நீராடி, கடவுளைத் தொழுது, கலவை சாந்து பூசி, காதணி, வீரபட்டம், திலகம், முத்தாரம், தோள்வடம் அணிந்து, கையில் முத்துவடம், மார்பில் நவமணி மாலை, பட்டாடை, முப்புரிநூல், உடைவாள், சிலம்பு, கழல் அணிந்து அழகாகத் தோன்றினார்.

இராமரும் சீதையும் திருமண மண்டபத்தில் திருமணக் கோலத்தில் அமர்ந்திருந்தனர். சீதை இராமர் திருமணச் சடங்குகளை வசிட்டர் சிறப்பாக நடத்தினார். ஜனகர் சீதையை தாரை வார்த்து இராமர் கையில் அளித்தார். இராமர் சீதை திருமணம் இனிதே நிகழ்ந்தது. 

       தேவர்கள் பூமழை பொழிந்தனர். அரசர்கள் மலர் தூவி வாழ்த்தினர். இராமரும் சீதையும் மணக்கோலத்தில் அனைவர் உள்ளங்களையும் கவர்ந்தனர். அதே வேளையில் மணப்பந்தலில் ஜனகர் மகள் ஊர்மிளைக்கும் இலக்குவனுக்கும், திருமணம் நடைபெற்றது. மேலும் சனகர் தம்பி குசத்துவன் மகள்களான மாண்டவிக்கும் பரதனுக்கும், சுருத கீர்த்திக்க்ம் சத்துருக்கனுக்கும் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. அனைவரும் மணமக்களை வாழ்த்தினர்.


Popular posts from this blog

நளதமயந்தி கதை (NALA THAMAYANDHI STORY)

சென்டினல் மக்கள் ( THE SENTINELESE)

திருப்பாண்டிக் கொடுமுடி (KODUMUDI TEMPLE)