மச்சாவதாரம் (MACHA AVATHAARAM)
தசாவதாரத்தில் முதல் அவதாரம் மச்சாவதாரம் ஆகும். "உலகில் அதர்மம் அதிகமாகும் பொழுது, தர்மத்தினை நிலைநாட்டுவதற்காக நான் இப்புவியில் அவதாரம் எடுக்கின்றேன்" என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லுகிறார். வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டவர் பரம்பொருள் திருமால். இப்பூவுலகினைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்களை அவர் எடுத்தார். சிறப்புக்கள் மிக்க திருமாலின் அவதாரங்களை தசாவதாரம் என்று கூறுவர்.
திருமால் எடுத்த பத்து அவதாரங்களைப் பற்றி சுகப்பிரம்ம மகரிஷி, பரீட்சித்து மகாராஜாவுக்கு உபதேசம் செய்தார். அப்பொழுது சுகப்பிரம்மரைப் பார்த்து பரீட்சித்து மகாராஜா, "பிரம்ம ரிஷியே! எதற்காக ஹரிபகவான் ஒரு சாதாரண கர்மவசியனான புருஷனைப் போல, உலகத்தாரால் நிந்திக்கப்படக் கூடியதாகவும், தாமசப் பிரகிருதியாகவும், சகிக்கக் கூடாததாகவும் இருக்கின்ற மச்சரூபம் தாங்கி அவதாரம் செய்தார்" என்று கேட்டார்.
அதற்கு சுகப்பிரம்மர் கூறியதாவது:
"மகாவிஷ்ணு எடுத்த முதல் அவதாரம் இது. மச்சாவதாரத்தை மத்ஸ்யாவதாரம் என்றும் கூறுவார்கள்.
பிரம்மா சோர்ந்து தூங்கும் போது அவர் வாயிலிருந்து வேதங்கள் தாமே வெளிவந்து கொண்டிருந்தன. இதைப் பார்த்த ஹயக்ரீவன் தனது யோக சித்தியினால் அந்த வேதங்களைத் திருடிக் கொண்டு போய், ஒளித்து மறைத்து வைத்தான். வேதங்கள் இருந்தாலன்றிப் பிரம்ம சிருஷ்டி இயங்காது. உலகத்தில் அறம் தடையின்றி சீராக நிறைவேற வேதத்தின் துணை அவசியம். எனவே ஹயக்ரீவனால் திருடி மறைக்கப்பட்ட வேதங்களை மீட்பதற்காக திருமால் மீனாக அவதரித்தார்.
பரம்பொருளாகிய திருமால் எடுத்த மச்சாவதாரத்தில் சத்யவிரதன் என்ற பெயருடைய ராஜரிஷி இருந்தான். அவன் நாராயணன் மேல் அளவிலா பக்தி கொண்டு விளங்கினான். இப்போது நடக்கும் கல்பத்தில் மனுவாக விளங்கும் விவஸ்வரன் இவனே. அந்த காலத்தில் அவன் திராவிட திருநாட்டின் அரசனாக இருந்தான். அந்த ஹரி பக்தன் உணவு எதுவும் உண்ணாமல், தண்ணீரை மட்டும் உட்கொண்டு ஒரு நோன்பு நோற்று வந்தான்.
அவன் ஒரு நாள் கிருதமாலா என்ற நதிக்கரையில் அமர்ந்து தன் மூதாதையர்களுக்குத் தண்ணீர் இறைத்து அர்ப்பனம் கொடுத்துக் கொண்டிருந்தான். அவ்வாறு அர்ப்பனம் செய்யும் பொழுது இரு கைகளிலும் தண்ணீர் எடுத்தான். அங்கே கைக்குள் தேங்கிய நீரில் ஒரு மீன் குஞ்சு அழகுற நீந்திக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.
பேரழகு மிக்க அந்த மீன் பேசியது. அது சத்யவிரதனைப் பார்த்து, "மதிப்பிற்குரிய ராஜனே! என்னை மீண்டும் தண்ணீரில் தள்ளி விடாதீர்கள். குட்டி மீனான என்னைப் பெரிய மீன்கள் விழுங்கி விடும் என்கின்ற அச்சம் என்னைக் கொல்கின்றது" என்றது.
இதைக் கேட்டு அகமகிழ்ந்த சத்யவிரதன், அந்த மீனின் வேண்டுகோளை நிறைவேற்ற நினைத்தான். ஆற்றுக்குத் தன்னுடன் கொண்டு வந்த கமண்டலத்திற்குள் மீனைப் போட்டான். அதைத் தன் வழிபாட்டு ஆசிரமத்திற்கு எடுத்துப் போனான். அன்று இரவே அந்த மச்சம் (மீன்) கிடுகிடுவென்று வளர்ந்து கமண்டலம் முழுவதும் பரவியது. அரசே! இந்த இடம் எனக்கு வசிக்கப் போதாது என்றது மச்சம். சத்தியவிரதன் மீனைக் கமண்டலத்தில் இருந்து எடுத்து நீர் நிறைந்த வேறு ஒரு பாத்திரத்தில் போட்டான். இந்தப் பாத்திரமும் எனக்கு வசிக்கப் போதவில்லையே என்று திரும்பவும் கெஞ்சியது. எனவே மன்னவன் உடனே மீனை அங்கிருந்து எடுத்து ஒரு குளத்தில் விட்டான். அது வெகு சீக்கிரமாக வளர்ந்து அந்தக் குளத்தை முழுவதும் அடைத்து நின்றது. அடுத்து அந்த மீனை ஆழமானதும், விரிந்தும் பரந்ததுமான மடுக்களிலும், ஏரிகளிலும் போட்டான். அங்கும் அது பெரிதாக வளர்ந்து தனக்கு வாழ இடம் போதவில்லை என்று சொல்லியது.
கடைசியாக அம்மீனை சமுத்திரத்தில் கொண்டு போடும் போது அந்த மச்சம் சொன்னது; "ராஜரிஷியே! இந்தப் பெரிய கடலில் திமிங்கலம் போன்ற பெரிய விலங்குகளின் நடமாட்டம் இருக்கிறது. ஆகவே என்னை நீ இங்கே விட்டுப் போய் விடாதே என்று அலறியது.
உடனே சத்தியவிரதன் அந்த மீனைக் கரம் கூப்பித் தொழுது, "பரம்பொருளே! ஒரு சாதாரண மீனாகத் தாங்கள் என்னிடம் வந்து மயங்க வைக்கிற மாயம் எனக்கு என்ன என்று தெரிந்து கொள்ள முடியவில்லையே? இப்படி தாங்கள் என்னை விடாமல் பிடித்து வைத்துக் கொண்டிருப்பதன் காரணம் என்ன? நீவிர் வளர வளர நிச்சயம் தாங்கள் நாராயணரே என்பதை உணர்ந்து கொண்டேன். ஆகவே பெருமானாகிய தாங்கள் இந்த உருவத்தோடு இங்கு வந்த காரணத்தைத் தங்கள் தொண்டனாகிய எனக்குத் தெரிவிக்கும் படி வேண்டுகின்றேன்" என மச்சாவதார மூர்த்தியை வீழ்ந்து வணங்கிக் கேட்டான்.
மச்சம் பதில் சொல்லியது. "ராஜரிஷியே! இன்று முதல் ஏழாம் நாள் அன்று இந்த பூமியும், விண்ணும், அதற்கிடைப்பட்ட வெளியும், பொங்கி வரும் கடலுக்கு இரையாகப் போகிறது. உலகங்கள் அழியும் நாள் வந்து விட்டது. அஞ்சாதே! நான் உனக்கு ஒரு பெரிய தோணியை அனுப்பி வைக்கின்றேன். நீ அந்தத் தோணியில் சமஸ்த ஔஷதங்களையும் (மூலிகைகள்) பற்பல வித்துக்களையும் ஏற்றிக் கொண்டு சப்த ரிஷிகளுடன் சர்வபலம் கொண்டவனாக அந்தகாரமான (இருள் சூழ்ந்த)சமுத்திரத்தில் மகா தீரனாக சஞ்சரிக்கப் போகிறாய்.
வாயுவால் அலைக்கழிக்கப்பட இருக்கும் அந்தத் தோணி கவிழ்ந்து விடாமல் இருக்க எனது கொம்பில் சேர்த்துக் கட்டி விடு.
அப்படிக் கட்டினால், நான் பிரம்மதேவனுடைய இராப்பொழுது தீரும் வரை அந்த ஓடத்தோடு சஞ்சரித்துக் கொண்டிருப்பேன். அப்போது சப்தரிஷிகளும் ஒளிமயமாக இருந்து உனக்கு வழிகாட்டுவார்கள். என் உடல் அப்போது திமிங்கலம் போலக் காணப்படும். அந்தப் படகை என் கொம்பில் கட்டச் சொன்னேன் அல்லவா? அப்படிக் கட்டுவதற்கு உரிய கயிறு வாசுகி என்ற பாம்பு என்பதை மறந்து விடாதே! அந்தப் பாம்பை எனது சிதளில் கட்டிவிடு. நீ எதற்கும் அஞ்சாதே! உனக்கு சர்வ மங்களமும் உண்டாகட்டும்" என்றார் மீன் வடிவில் இருந்த திருமால்.
தர்ப்பாசனத்தில் இருந்த படி சத்தியவிரதன், உலகை அழிக்கப் போகும் பிரளயத்தை எதிர் நோக்கிக் கொண்டு இருந்தான். ஏழாம் நாள், ஆகாயம் இருளில் மூழ்கியது. பெருமழை பெய்த வண்ணம் இருந்தது. கடல் கரைபுரண்டு வந்தது. பூமி இருக்கும் அடையாளமே தெரியவில்லை. எங்கும் ஒரே தண்ணீர் மயமாக இருந்தது. அந்தப் பொங்கும் நீர்ச்சுழிகளின் ஊடே பரந்தாமன் தங்கத் திமிங்கலத் தோற்றத்துடன் காணப்பட்டார். தங்கமயமாக பிரகாசித்த அவர் உடம்பில் கொம்பு போல் ஒன்று நீண்டு காணப்பட்டது.
சத்தியவிரதன் அப்போது சப்த ரிஷிகளுடன் மூலிகை விதைகள் சகிதம் ஓடத்தில் ஏறி இருந்தான். அவன் ஓடத்தை பகவான் கூறியபடி அவரைத் தியானம் செய்த படியே, தங்கத் திமிங்கலக் கொம்பில் கட்டினான். அந்த அபூர்வ மச்சம் இவர்கள் ஏறிய படகைப் பற்றி இழுத்துக் கொண்டு, வெள்ளத்தின் மத்தியில் பயமோ, அபாயமோ இன்றி அலைந்து கொண்டு இருந்தது. அந்த சமயம் பரந்தாமன், ராஜரிஷி சத்தியவிரதனுக்கு மச்சாவதார புராணத்தை உபதேசம் செய்தார்.
பிரம்மதேவன் நித்திரை காலம் முடிந்தது. உலகத்தை கவ்வி இருந்த இருள் விலகி, ஒளி பரவியது. ஓயாது பெய்த மழையும் நின்றது. பொங்கிப் பரவிய தண்ணீர் வடிய ஆரம்பித்தது. மச்சமூர்த்தி ஓடத்தைக் கரை சேர்த்தார். சத்தியவிரதன் அச்சமயம் பிரம்மனை நோக்கி பிரார்த்தனை செய்தான்.
நித்திரையிலிருந்து மீண்ட பிரம்மதேவன் அவன் முன்பு காட்சி அளித்தார்.
மீண்டும் அவர் தம் சிருஷ்டியைத் தொடங்க நினைத்த போது தான், வேதங்கள் மறைந்த விபரம் அவருக்குத் தெரிந்தது. பிரம்மதேவர் திருமாலை நோக்கி தியானம் செய்தார்.
அது சமயம் மச்சமூர்த்தியாக இருந்த பகவான் வேதங்களை ஹயக்கிரீவன் ஒளித்து வைத்திருப்பதை அறிந்து வெள்ளத்திற்குள் புகுந்து போனார். ஹயக்கிரீவனை வெள்ளத்தில் கண்டு அவனுடன் போர் புரிந்தார். வேதங்களை மீண்டும் பிரம்மதேவரிடம் கொடுத்தார். மறுபடியும் சிருஷ்டியைத் தொடங்கும் படி சொன்னார். பின் சத்தியவிரதன் வைவசதமனு என்ற பெயருடன் ராஜ்யப் பரிபாலம் செய்து வரலானான்.
இந்த மச்சாவதார மூர்த்தியைப் பிரார்த்தனை செய்பவர்களுக்கு சகல நன்மைகளும் உண்டாகும்.
Comments
Post a Comment